வவுனியா ஓமந்தை விளக்கு வைத்த குளத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவரை முதியவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதையடுத்து அந்தச் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் வைத்திய கவனிப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வந்துள்ளதாவது,
பாதிக்கப்பட்டுள்ள சிறுமி தனது தாயாருக்கு புதன்கிழமையன்று வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் பாலைப்பழம் ஆய்வதில் உதவி செய்து கொண்டிருந்தாராம். அப்போது தாயுடன் இருந்த கைக்குழந்தை நித்திரை கொண்டதனால் அதனை வீட்டில் தொட்டிலிலிட்டு வருமாறு தாயார் இந்தச் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
குழந்தையை தொட்டிலிலிட்டு அதனை நித்திரை கொள்ளச் செய்த போதே சந்தேக நபராகிய வயோதிபர் வந்து சிறுமியை பலவந்தப்படுத்தியுள்ளார். அப்போது சிறுமி அபயக்குரல் எழுப்பியதையடுத்தே இந்தச் சம்பவம் பற்றி வெளியில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரைப்பற்றிய அடையாளங்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் அவரை தேடிச் சென்றுள்ளனர்.