சொந்த பணத்தை கொள்ளையடிக்க துப்பாக்கியுடன் வங்கிக்கு வந்த பெண் : மிரள வைக்கும் காரணம்!!

461

லெபனானில்..

பெண் ஒருவர் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து தனது பணத்தையே திருட முயன்ற நிலையில், இதற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு, லெபனான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால், அந்நாட்டு அரசு மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இயல்பான வாழ்க்கை போல இல்லாமல், நிறைய நெருக்கடியையும் இதனால் அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மேலும், அரசு விதித்த கடும் கட்டுப்பாடுகளில் ஒன்று, வங்கிகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு மாதத்திற்கு எடுக்க வேண்டும் என்பது. இதனால், அவசர காலத்திற்கு கூட பணம் எடுக்க முடியாமல், கடும் இன்னலுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில், அந்நாட்டை சேர்ந்த Sali Hafiz என்ற பெண் ஒருவர் செய்துள்ள காரியம், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

சாலி ஹபீஸ் என்ற பெண், ஒரு சமூக ஆர்வலராக இருந்து வருகிறார். மேலும், அவர் தனது வங்கி கணக்கில் சுமார் 13,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 10 லட்ச ரூபாய்) வரை சேமித்து வைத்துள்ளார். அப்படி இருக்கையில், சாலியின் சகோதரிக்கு புற்றுநோய் உருவானதாக கூறப்படுகிறது.

இதனால், வங்கியில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை திரும்ப எடுக்கவும் சாலி முயன்றுள்ளார். ஆனால், மாதத்துக்கு 200 டாலர்கள் வரை தான் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளதால், அதற்கு மேல் தர முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தனது சகோதரிக்கு சிகிச்சை மேற்கொள்ள சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த சாலி ஹபீஸ், மிகவும் வினோதமான ஒரு ஆலோசனையை கையில் எடுத்துள்ளார். அதன் படி, சில தன்னார்வலர்களுடன் இணைந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நேராக வங்கிக்கே சென்றுள்ளார் சாலி.

அங்கே சென்று துப்பாக்கியை காட்டி, தனது சேமிப்பு பணமான 13 ஆயிரம் டாலர்களை கொள்ளையடிக்கும் முயற்சிகளை அவர் செய்துள்ளார். இதன் பின்னர், அந்த பணத்துடன் அவர் அங்கிருந்து தப்பித்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.  மேலும், வீட்டில் இருந்து கிளம்புவது முதல் வங்கிக்கு செல்வது வரை பேஸ்புக் நேரலையில், சாலி ஹபீஸ் ஸ்ட்ரீமிங் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், யாருக்கும் ஆபத்து விளைவிக்கும் எண்ணமில்லை என்றும், பொம்மை துப்பாக்கியுடன் தான் நாங்கள் வங்கிக்குள் நுழைந்தோம் என்றும் சாலி குறிப்பிட்டுள்ளார். சொந்த பணத்தை கொள்ளையடிக்க வங்கிக்குள் நுழைந்த பெண் தொடர்பான செய்தி, தற்போது அதிகம் பரப்பரப்பை உண்டு பண்ணி உள்ளது.