ஹிஜாப் அணியாத இளம் பெண்ணை அடித்து கொன்ற பொலிஸார்!!

452

ஈரானில்..

ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுவெளியில் பெண்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில், ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் கூட நடக்கிறது.

இவ்வாறு இருக்க, அண்மையில் ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது ஈரானில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் குடும்பத்தினரை கலாச்சார பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கலாச்சார பொலிஸார் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் அவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதுடன், அங்கு வைத்தும் பொலிஸார் அவரை தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மயங்கியுள்ளார். இதனால் பொலிஸார் நோயாளர் காவு வண்டி மூலம் மாஷா அமினியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மாஷா அமினி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் ஈரானில் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பிற மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.