பல கோடிகளுடன் சொகுசு வாழ்கை : மோசடி மன்னனை கனவு நாயகனாக கருதி மணக்க நினைத்த இலங்கை நடிகை!!

1318

ஜாக்குலின் பெர்னாண்டஸ்..

தொழிலதிபரை மிரட்டி பல கோடிகளை பறித்த வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகரை இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார். சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.215 கோடி மோசடி செய்துள்ளார். மிரட்டி பறித்த பணத்தை பாலிவுட் நடிகைகளுக்கு செலவு செய்தது அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்தது.

இதில் அதிகமாக பயனடைந்த ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு பல முறை விசாரணை நடத்தி இருக்கிறது. சுகேஷ் சந்திரசேகரின் குற்றப்பின்னணி குறித்து தெரிந்தும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்து சுகேஷுடன் தொடர்பில் இருந்து வந்ததாக அமலாக்கப்பிரிவு தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பொலிசார் நடத்திய விசாரணையில் இருவருக்கும் பணமோசடி வழக்கில் நேரடி தொடர்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. நடிகை ஜாக்குலினிடம் சுகேஷ் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார்.

அதோடு சுகேஷை ஜாக்குலின் கனவு நாயகன் என்று அழைப்பார் என்றும், அவரையே திருமணம் செய்யவும் நினைத்தார் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பில் ஜாக்குலினிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.