இளம்பெண் உயிரை குடித்த வங்கி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

456

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் அருகே தந்தை வாங்கிய கடனுக்காக வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனமுடைந்த இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் அஜி குமார்(Aji Kumar). இவர் வீடு கட்டுவதற்காக, ரூ.11 லட்சம் ஒரு வங்கியிலிருந்து கடன் வாங்கியுள்ளார். கொரோனா விவகாரத்தால் அஜி குமார் வேலையை இழந்ததால் அந்த கடனை திருப்பி செலுத்த தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆனாலும், கடந்த மார்ச் மாதம் ரூ.1.5 லட்சம் ரூபாய் வங்கிக்கு கொடுத்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியது.

பின்னர் வங்கி அதிகாரிகள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அஜி குமாரின் மகள் அபிராமி(வயது 20) கல்லூரியில் இருந்து வந்தபோது நோட்டீஸ் ஒட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அபிராமி(Abhirami) கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிராமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அபிராமியின் மரணத்திற்கு காரணம் வங்கி அதிகாரிகள் தான் என குற்றம்சாட்டி உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.