நாய் போல் ஊளையிடும் இளைஞர் : அலட்சியத்தால் நாயாக மாறிய பரிதாபம்!!

1330

ஒடிசாவில்..

நாய் கடித்து விட்டால் உடனே தடுப்பூசி போட வேண்டும் இல்லையெனில் நாய் போல் வெறி பிடித்து ஊளையிட்டு உயிரை விடுவர் எனக் கூறுவர். உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள உதய்பூர் பகுதியில் வசித்து வருபவர் 25 வயதான ராஜேஸ் பியூரா . கூலித் தொழிலாளியான இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தது. அதற்கு அவர் தடுப்பூசி உள்ளிட்ட எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் திடீரென ராஜேஸ் பியூரா, நவம்பர் 1ம் தேதி முதல் நாய் போல ஊளையிட ஆரம்பித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், சில நாட்களில் இது சரியாகி விடும் என்று நினைத்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்து ராஜேஸ் பியூரா நாயைப் போல ஊளையிடவும், பயந்து போன அவரது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைபடி, கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “நாய் கடித்த பிறகு சிகிச்சைக்கு செல்லாத ஒருவருக்கு ஹைட்ரோஃபோபியா அல்லது தண்ணீர் பயம் இருக்கும். அதன் அறிகுறிகளில் லாரிங்கோஸ்பாஸ்சும் ஒன்று. அதனால் தான் ராஜேஸ் பியூரா நாய் போல ஊளையிடுகிறார்” என்றனர்.