விபத்தில் இறந்த நண்பனுக்காக தூக்கில் தொங்கிய இளைஞர் : இந்த காலத்தில் இப்படி ஒரு நட்பா?

755

விழுப்புரத்தில்..

செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் மற்றும் பிரபு. சிறு வயதில் இருந்தே மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இவர்களில் சீனிவாசன் பள்ளி முடித்து விட்டு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிரபு, பள்ளியோடு நிறுத்தி விட்டு தனியார் கூரியர் சர்வீசில் வேலை செய்து வந்தார்.

வெளியே எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்த நிலையில் இவர்களின் நட்பை ஊரே பார்த்து வியந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 10) அன்று வழக்கம் போல வெளியே சென்றபோது சீனிவாசனிடம் பிரபு ஒரு கோரிக்கை வைத்தான்.

சீனிவாசன் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்சர் பைக் வாங்கிய நிலையில் அதனை ஓட்டுவதற்கு வெகுநாளாக விருப்பம் கொண்டிருக்கிறார் பிரபு. நண்பனின் விருப்பத்தை நிறைவேற்ற தனது வாகனத்தை பிரபு ஓட்டுவதற்கு கொடுத்துள்ளார்.

இதையடுத்து நண்பனிடம் பைக்கை ஒப்படைத்த சீனிவாசன் பின்னால் ஏறி அமர்ந்தவுடன் பைக் சீறிப் பாய்ந்தது. என்.ஆர்.பேட்டை ஊராட்சி வெல்கம் நகர் அருகே சுமார் 100 கி.மீ. வேகத்தில் சென்றபோது பைக்கை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் பிரபு. மழைநீரினால் ஏற்படும் பள்ளங்களில் செல்ல முடியாமல் தடுமாறிய பிரபு, 100 கி.மீ. வேகத்தில் பிரேக் அடித்தார்.

அப்போது பின்னால் அமர்ந்த பிரபு தூக்கி எறியப்பட்டதில் எதிரே இருந்த விளம்பரப் பலகையின் மீது மோதி மார்பு நொறுங்கியது. இந்த விபத்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிய பிரபு லேசான காயங்களோடு உயிர் தப்பினார். இதையடுத்து செஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு வந்த சீனிவாசனின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இதைப் பார்த்துக் கொண்டே இருந்த பிரபு, குற்றவுணர்ச்சியில் நா தழுதழுத்து சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கு கிடந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து தனது கழுத்தில் குத்திக் கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் பிரபுவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக புதுச்ரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடித்து விட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார் பிரபு.

ஆனால் வீட்டுக்கு வந்தும் தனது நண்பன் சீனிவாசனையே நினைத்து குற்றவுணர்ச்சியில் குமுறிக் கொண்டிருந்தார் பிரபு. இதையடுத்து நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கி உள்ளார் பிரபு.

நட்புக்காக உயிரை விட்ட தியாகத்தை பாராட்டுவதா? குடும்பத்தை மறந்து உயிரைக் கொடுத்த துயரத்தை நினைத்து அழுவதா? என்று தெரியாமல் திகைக்கின்றனர் பிரபுவின் குடும்பத்தினர்..