வவுனியாவில் ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!!

966

ஜனாதிபதி..

ஜனாதிபதி அலுவலகத்தின் வடக்கு மாகாண அபிவிருத்தி விசேட பிரிவு உப அலுவலகம் வவுனியாவில் இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதுடன், குறித்த அலுவலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ்.இளங்கோபன் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைளையும், மக்களது பிரச்சனைகளையும் விரைவாக தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் குறித்த அலுவலகம் செயற்படவுள்ளது.

இதன் போது, வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட பயனாளிகள் 32 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், போரால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு இழப்பீடுகளும், 10 விவசாயிகளுக்கு மானிய உரமும் ஜனாதிபதி உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தோனந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.