இளைஞரின் சந்தேக புத்தியால் நடந்த விபரீதம் : பட்டப்பகலில் காதலிக்கு கத்திக்குத்து!!

318

ஈரோடில்..

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் சந்தோஷ் (32), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் பணி செய்து வருகிறார்.

இவருக்கு, பவானிசாகர் கூலிங் லைன் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்,தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

பழக்கம் நெருக்கமாக மாறி அந்த பெண்ணும், சந்தோசும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சந்தோஷ் காதலித்த பெண் வேறு ஒருவரையும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த சந்தோஷ் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தனது நண்பர் காந்தனுடன், காதலி வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து செல்போனில் பேசிய சந்தோஷ், அவரை வெளியே வரச்சொல்லியுள்ளார். வெளியே வந்த அந்த பெண்ணுக்கும், சந்தோசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கன்னம், வலது தோள்பட்டை, விரல்கள், மணிக்கட்டு என பல இடங்களில் சரமாரியாக சந்தோஷ் குத்தினார்.

அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சந்தோசையும், காந்தனையும் கைது செய்தனர். பட்டப்பகலில் இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.