வவுனியாவில் ஞாயிறன்று தியாகிகள் தினம்!

374

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் செயலாளர்நாயகமுமாகிய அமரர் கே.பத்மநாபாவின் 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உயிர் நீத்த கட்சியின் அனைத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் போராளிகள், பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூறும் தியாகிகள் தின நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30-06-2013) காலை 9.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் வழங்கப்பட்ட நிதியுதவியில், யுத்தத்தின் போது பெற்றோரை இழந்த 175 பிள்ளைகளுக்கு அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான சேமிப்புப்புத்தகங்கள் வழங்குதலும்,

யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட இருபது நபர்களுக்கு முதல் கட்டமாக சுயதொழில் ஊக்குவிப்பு நிதி வழங்குதலும் இடம்பெறும்.

தொடர்ந்து பத்மநாபா நினைவுப்பேருரையும்இ சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கட்சியின் தலைவர்கள், பிரமுகர்கள் உரையாற்றுகின்றனர்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

(அதிரடி இணையம்)

eprlf