உன் வயிற்றில் என் சாதி பிள்ளையா? வளைகாப்பில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

1012


கள்ளக்குறிச்சியில்..



கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கல்பனா எம். பி எட் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.



இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆண்டு இரண்டு குடும்பத்தின் முழு சம்மதத்தோடு திருமணமும் நடந்துள்ளது. திருமணம் முடிந்து கணவன் – மனைவிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இருவரும் சந்தோஷமாகத்தான் குடும்பம் நடத்தி வருகின்றனர்.




ஆனால் கல்பனா மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண் என்பதால் கணவர் வெங்கடேசனின் உறவினர் செல்வம் என்பவர் தொடர்ந்து சாதியை காரணம் காட்டி கல்பனாவை துன்புறுத்தி வந்துள்ளார்.


சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கே சாதிப் பெயரைச் சொல்லி கல்பனாவை அசிங்கப்படுத்துவது, சாதியை சொல்லி கல்பனாவை தள்ளி வைப்பது, குடிதண்ணி பிடிக்க போனால் ”நீ இங்கு வந்து தண்ணீர் பிடிக்கக்கூடாது நீ தண்ணீர் பிடித்தால் நாங்கள் தீட்டாகி விடுவோம்” என செல்வம் அடிக்கடி கல்பனாவை கலங்கடித்து வந்துள்ளார் செல்வம்.

இதனால், செல்வத்திற்கும் கல்பனாவின் கணவர் வேங்கடசுவுக்கும் என் மனைவியை ஏன் இப்படி சாதி பெயரைச் சொல்லி அசிங்கப்படுத்துகிறாய் என அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழு மாத கர்ப்பிணியான கல்பனாவிற்கு அதே கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது செல்வம் என்பவர் கல்பனா வீட்டிற்கு செல்லும் வழியில் செல்ல விடாமல் பெரிய பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது கல்பனா செல்வத்திடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

அதற்கு செல்வம், ”நீ இங்கு வந்தால் உன்னை கடப்பாரையால் கொன்று புதைத்து விடுவேன் எனவும் அதற்காகத்தான் குழி தோண்டி வைத்துள்ளேன்” எனவும் ஆக்ரோசமாக கூறியுள்ளார்.

மேலும், ”உன் குழந்தை எங்கள் சாதியில் பிறந்தால் நாங்கள் எல்லோரும் தீட்டாகி விடுவோம் ஒழுங்காக உன் அம்மா வீட்டிற்கு ஓடிவிடு.. இல்லையென்றால் உன் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீயே கொன்றுவிடு.. அப்படி செய்யவில்லை என்றால் உன்னை கடப்பாரையால் அடித்து கொலை செய்து விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் நிறைமாத கர்ப்பிணியான கல்பனாவும் அவரது கணவர் வெங்கடேசனும் வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு வீட்டுக்கு கூட செல்லாமல் நேராக சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு வந்து செல்வம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தனர்.

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வளைகாப்பு நிகழ்ச்சி முடித்துவிட்டு நேராக காவல் நிலையத்திற்கு வந்து புகார் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.