3 ஆண்டுகளாக பேசாத தாய்… விரக்தியில் எலி மருந்து சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

347

புதுச்சேரியில்..

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 3 ஆண்டுகளாக பேசாத தாயை பயமுறுத்தி பேச வைப்பதற்காக எலி மருந்து சாப்பிட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது தம்பி ரமேஸ்வரன். ரமேஸ்வரன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், முத்துமாரி (40) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் காரைக்கால் மாதா கோவில் வீதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்தநிலையில் தற்போது ரமேஸ்வரன் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் முத்துமாரிக்கும், அவரது தாயார் அமுதாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லையென கூறப்படுகிறது. இதற்கிடையே பலவகையில் முயற்சித்தும் தனது தாயாருடன் முத்துமாரியால் பேசமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த முத்துமாரி எலி மருந்து சாப்பிட்ட நிலையில் கடந்த 8-ந்தேதி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விவரத்தை தனது பெரியப்பாவான மகேஸ்வரனுக்கு முத்துமாரியின் மகன் சுசில்பாரதி, போனில் தகவல் கொடுத்துள்ளார்.

உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று முத்துமாரியிடம் மகேஸ்வரன் விசாரித்த போது தனது தாய் கடந்த 3 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார். கணவரும் வெளிநாட்டில் இருப்பதால் தனது தாயாரை பயமுறுத்துவதற்காக பேசவைக்கும் முயற்சியாக எலி மருந்து சாப்பிட்டதாக முத்துமாரி கூறியுள்ளார்.

தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பரித்திரிக்கு முத்துமாரி கொண்டு செல்லப்பட்டார். அங்கும் முடியாததால், சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் முத்துமாரி காரைக்காலுக்கு அழைத்து வரப்பட்டார். உடல்நிலை மோசமானதையடுத்து, மீண்டும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட முத்துமாரி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இது குறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 3 ஆண்டுகளாக பேசாமல் இருந்த தாயை பயமுறுத்தி பேச வைக்கும் முயற்சியில் எலி மருந்து சாப்பிட்ட மகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.