உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.
இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும், தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகள் அறையிருதிப் போட்டியுடனும் வெளியேறின.
வங்கதேச அணி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. அதேபோல் மற்றுமொரு காலிறுதியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம் படுதோல்வியடைந்து வெளியேறியது.
அடுத்து அறையிருதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டது. அதற்காக அந்த வீரர்களுக்கு எதிராக இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் போராட்டங்கள் நடைபெறவில்லை. வீரர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்படவில்லை, வீரர்களின் படங்கள் எரிக்கப்படவில்லை.
நாடு திரும்பிய இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. ரசிகர்கள் பலரும் திரண்டு வரவேற்பு வழங்கினர்.
அதே போன்று இலங்கை அணி 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 50 ஓவர் உலக கிண்ண போட்டிகளிலும் 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிவரை சிறப்பாக சிறப்பாக விளையாடியபோதும், நான்கு இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை ரசிகர்கள், வீரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டதிலோ, அல்லது வீரர்களின் வீடுகளின் மீது தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களிலோ ஈடுபடவில்லை. மாறாக நாடுதிரும்பிய இலங்கை அணி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதே போன்று இம்முறை வங்கதேச ரசிகர்கள் தங்கள் வீரர்கள் திறமையான முறையில் விளையாடியதாகவும் நடுவர்கள் செய்த தவறால்தான் தோற்றதாகவும் முழுமையாக தங்கள் வீரர்களின் பக்கம் இருந்தார். அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஒரு படி மேலே போய், நடுவர்கள் செய்த தவறால்தான் தங்கள் நாடு தோற்றதற்கு காரணம் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
அதேபோல் தோல்வியடைந்து தாய்நாடு திரும்பிய தென்னாபிரிக்க வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் விமானநிலையத்தில் அன்புடன் வரவேற்றனர். வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு உற்சாகமான அளவளாவினர்.
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டனர். உலகக் கிண்ண போட்டிகளில் தொடர்ந்து பரிதாப தோல்வியைச் சந்தித்து வரும் தென்னாபிரிக்க வீரர்களுக்கு இந்த ஆறுதல் இதமளித்தது. வீரர்கள் மனநிறைவுடன் வீட்டுக்கு சென்றனர்.
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கின்றது கடந்த 2011ம் ஆண்டு 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்றது. அதற்கு முன்பு 1999 முதல் 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிதான் தொடர்ச்சியாக மூன்று முறை உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்று சாதனை படைத்திருந்தது.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணி காலிறுதிச் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. தோல்விக்காக அவுஸ்திரேலிய வீரர்களை அந்த நாட்டு ரசிகர்கள் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை. வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்பதை புரிந்து வைத்துள்ளனர்.
ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்ற அணி தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்.
அப்படிப் பார்த்தால் மூன்று முறை உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்ற அணி வீரர்களை அந்தநாட்டு ரசிகர்கள் என்ன செய்திருக்க வேண்டும்.
வெற்றி பெற்றால் கொண்டாடுவதும் வீரர்களை கடவுள் அளவிற்கு தூக்கிப் பிடிப்பதும் தோல்வியடைந்தால் அடுத்த நாளே காலுக்குக் கீழ் போட்டு மிதிப்பதும் இந்தியாவில்தான் தொடர்கிறது. இந்த நிலை மாறவேண்டுமென்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.
நேற்று முதல் இந்திய அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வந்தடையும் விமான நிலையம் மற்றும் வந்தடையும் நேரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதேநேரம் கிரிக்கெட் வீரர்கள் அனைவரினதும் வீடுகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. இது உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அவமானமாகும்.
தோல்வியடையும்போது ஆறுதல் அளிக்காத ரசிகர்களுக்கு வெற்றியை கொண்டாடவும் உரிமை இல்லை என்ற தார்மீக உண்மையையும் ரசிகர்கள் உணர வேண்டும்.