என் தேசத்தைப் பற்றி – மித்யா கானவி!!

525

Kavithai

என்னடி தோழி
எப்படி சுகம்?

சிட்டுக் குருவி
இசை மறந்த எம்
தேசத்தைப்பற்றி
என்னத்தை சொல்ல -நான்

துருப்பிடித்த துப்பாக்கிகள்
எல்லைதாண்டியே வருவதால்
சத்தமின்றி கொல்லும்
சுவாச நோய் பற்றி…

வாகை மரங்கள்
உதிரும் கண்ணீரில்
அரசமரங்கள்
உயிர்ப்பித்தல்
பற்றி-எப்படி
சொல்ல நான்..

வற்றிப் போகாத
வரட்டுப் பிடியில்
ஒற்றை காலில்
நிற்கும் கொக்கை-பார்த்து
வெக்கிப் போகும்
தூரோகத்தை பற்றி
எப்படிச் சொல்லுவேன்..

செம் பருந்தை புணரத்தூரத்தும்
கானாங்கோழிகளின்
நப்பாசை பற்றி
யாரிடம் சொல்லுவேன்

ஆறிடா ரணங்களில்
ஆழ்மனதில் பதிந்திட்ட
அவலங்கள் -ஈரம்
காயாமல் இன்னும்
பிசு பிசுக்கும்

புயலடித்த தேசத்தில்
சிதறுண்டு போன
பறவைக் கூட்டங்களின்
இருப்புகள் பற்றி

உயிர்களை நிலைநிறுத்த
உண்மைகளை உரு மறைக்கும்
என் பேனாவை வைத்து
எப்படி சொல்லுவேன்
என் தேசத்தைப்பற்றி.

-மித்யா கானவி-