நடுவானில் விமானியின் அறைக்குள் நடிகை சென்றது ஏன்??

402

air india

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானி அறைக்குள் நடிகையை உட்கார அனுமதித்த விமானிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் பெங்களூரில் இருந்து ஐதராபாத்திற்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தென் மாநில நடிகை ஒருவரும் பயணித்தார். அவரை பார்த்த விமானிகள் ஜெகன் எம்.ரெட்டி மற்றும் கிரண் ஆகியோர் விமானி அறைக்குள் அவரை கூட்டிச் சென்றதோடு அங்கு சிறிது நேரம் உட்காரவும் அனுமதித்தனர்.

இது தொடர்பாக அதே விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகத்திற்கு முறைப்பாடு தெரிவித்தார். இதையடுத்து விமானிகள் இருவரையும் ஏர் இந்தியா நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள் கூறியதாவது..

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற விமானங்கள் மோதி இரட்டை கோபுர கட்டடங்கள் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் பயணிகள் யாரையும் விமானி அறைக்குள் அனுமதிக்கக் கூடாது என ஏர் இந்தியா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த விதிமுறைகளை மீறி நடிகையை விமானி அறைக்குள் அனுமதித்த விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக துறை ரீதியான விசாரணையும் நடைபெறும். சிவில் விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகமும், இது குறித்து தீவிர விசாரணை நடத்துகிறது. இவ்வாறு ஏர் இந்தியா அதிகாரிகள் கூறினர்.