வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட முதலியார் குளம் கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கப்பாச்சி என்னும் பழம்பெரும் கிராமத்தில் கானபடுகின்ற அரச மற்றும் பொது கட்டிடங்கள் கவனிப்பரற்றுகிடப்பதாக அங்கு வசிக்கும் கிராம மக்கள் வவுனியா நெற் இணையத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேற்படி கிராமத்தில் வறுமையின் பிடியில் 90 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் அன்றாட கூலிக்கு வேலை செய்து பிழைப்பு நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்படி கப்பாச்சி கிராம மக்கள் எதுவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் போக்குவரத்திற்கான பாதை மற்றும் தண்ணீர் வசதிகளின்றி தவிக்கின்ற நிலையும் காணபடுகின்றன.
இக்கிராமத்துக்கு எந்த பேருந்து வசதிகளும் செய்து தரப்படாத நிலையில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் நடந்தே செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது. கோடைக்காலங்களில் பயமின்றி சிறுவர்கள் பாடசாலைக்கு சென்று வந்தாலும் மாரிகாலத்தில் கரைபுரண்டு ஓடும் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து செய்வதற்கு சீரான பாதை வசதிகள எதுவும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை .
இக்கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பராரமரிப்பில் உள்ள பொதுநோக்கு மண்டபம் பல லட்சம் ரூபா செலவில் 2008 ஆம் ஆண்டில் GTZ நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கபட்டுள்ளது. ஆனால் அங்குள்ள அந்த மிகப்பெரிய கட்டிடத்தை தற்போது பார்கின்றபோது கால்நடைகளும் வௌவால்களும் மாத்திரமே அதனை பயன்படுத்துகின்ற நிலையை காணலாம் .
செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட இந்த கப்பாச்சி கிராமத்தில் காணப்படும் பல பொதுக் கட்டிடங்களின் நிலையை பார்கின்ற போது அக்கட்டிடங்கள் கட்டி முடிக்கபட்டு திறப்புவிழா நடத்திய பின்னர் எந்த அரசியல்வாதிகளோ அல்லது அரச அதிகாரிகளோ சென்று பார்த்தனரோ என்னும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது .
கப்பாச்சி கிராமத்தில் காணப்படுகின்ற கூட்டுறவு சங்கக் கட்டடமும் கட்டிமுடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் மட்டும் இயங்கிய பின்னர் அதுவும் மூடப்பட்டு மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது .
அதேபோன்று முன்பள்ளிக்குரிய கட்டிடமும் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்தக் கட்டடங்களை செட்டிகுளம் பிரதேச செயலகம் கவனத்தில் எடுத்து பராமரிக்க வேண்டும்.மேற்படி கப்பாச்சி கிராமத்தின் அன்றாட மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் .
தேர்தல் காலங்களில் புற்றீசல்கள் போல் படையெடுத்துச் செல்லும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் சரி தோற்றாலும் சரி பின்னர் இதுபோன்ற கிராமங்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும் வரை காலடி எடுத்து வைப்பதேயில்லை என்பது அவர்களது கூற்றாகும் .
இயன்றவரை அரச அதிகாரிகள், கிராமசேவையாளர்கள் மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆகியோர் மேற்படி கப்பாச்சி கிராமம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தி அங்குள்ள அரச மற்றும் பொதுச் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பிரதேசவாசிகளின் வேண்டுகோளாகும் .
வவுனியா நெற் செய்திகளுக்காக வித்தகன்