மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின் போது ஒரு உருக்கம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் பார்த்த காணொளி அது.
விளையாடத் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. அந்த ஈர்ப்பு, அவரின் இரசிகன் என்று சொல்லும் அளவிற்கு என்னை மாற்றியது. ஆரம்ப காலங்களில் மிகவும் நிதானமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சங்கா, குறுகிய காலத்திலேயே மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தனது சாதனைகளைப் படைத்தார்.
ஒரு விளையாட்டு வீரனுக்குரிய, அனைத்து விதமான நற்பண்புகளையும் ஒருங்கே கொண்டுள்ளார் என அதிகம் அனைவராலும் பேசப்பட்டவர். ஆட்டமிழப்பு என்று தனக்குத் தெரிந்தால் உடனேயே மைதானத்தை விட்டு வெளியேறும் ஒரு அரிய வகைப் பண்பைக் கொடிருந்தார்.(IPL போட்டிகளில் இதனைக் காணக்கூடியதாகவிருந்தது.) இது எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு தனித்துவமான பண்பாகக் காணப்பட்டது.
ஆரம்ப காலங்களில் சங்கா, கிரிசை விட்டு எவ்வளவு தூரம் முன்னோக்கி சென்று அடித்தாலும், எல்லைக் கோட்டிற்கு முன்னால் விழுந்து நான்கு ஓட்டங்களாகவே பெற்ற சங்கா, பின்பு வந்த காலங்களில் தன்னை ஒரு அதிரடி வீரராகவும் நிரூபித்திருந்தார்.
விக்கெட் காப்பாளர் என்ற பெயரில் அபரிமிதமான ஸ்டம்புகளினையும் (அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு போட்டியில் அபாரமான ஒரு ஸ்டம்ப்) மிகச்சிறந்த டைவ் முறையிலான பிடி எடுப்புக்களையும் (பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் ஒற்றைக் கையால் அபாரமான பிடியெடுப்பு) கிரிக்கெட்டில் செய்து காட்டியவர்.
ஒரு முறை மாத்திரம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு பந்துப் பரிமாற்றத்தினை நிகழ்த்தியதாக ஒரு ஞாபகம் உண்டு.
எந்த ஒரு வீரனுக்கும் பொருத்தமான இன்னொரு வீரன் துணையாக உள்ளபோது சாதனைகள் செய்ய வாய்ப்புக்கள் உண்டு. அப்படித்தான் சங்கா – மஹேல ஜோடி. டெஸ்ட் போட்டியில் சிறந்த இணைப்பாட்டத்தினை தமக்கிடையே பகிர்ந்து கொண்டவர்கள்.
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாது, T20 மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் இவர்கள் களத்தில் நின்றால் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் தான் இருக்கும். வீரன் என்பதைத் தாண்டியும், தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன், அதற்காகவும் தன்னை அர்பணித்துக் கொண்டவர். எத்தனையோ போட்டிகளில் தலைவராக இருந்தும், தனது துடுப்பாட்டத்திலும் சறுக்காமல் சென்று கொண்டிருந்தவர்.
பெரும்பாலான தலைவர்கள் தமக்குரிய துடுப்பாட்டம் அல்லது பந்து வீச்சில் சில வேளைகளில் பிரகாசமாக இருக்கமாட்டர்கள். 2011 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியைப் பெற்றிருந்தாலும், தனது சிரித்த முகத்துடன் இந்திய வீரர்களை வாழ்த்திய புகைப்படம் இப்பொழுதும் எனது கணினியிலுள்ளது.
அதே போல, 2014 T20 உலகக் கிண்ணக் கோப்பையில் அதே இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் துள்ளிக் குதித்த காட்சியை யாராலும் மறக்கமுடியாது.
கிரிக்கெட் வீரர் என்பதைத் தாண்டி, அவர் இலங்கை என்பதனை பற்றி ஆற்றிய உரை அவர் மேலிருந்த மதிப்பினை இன்னும் எனக்கு அதிகப்படுத்தியது.
எந்தவொரு வீரருக்கும் இல்லாதது போல, சங்காவிற்கான ஓய்வு பெரும் காலங்களில் இலங்கை இரசிகர்கள் பல்வேறு அவரைப் பெருமைப்படுத்தும் நிகழ்வுகளை செய்துகாட்டியிருந்தார்கள்.
எந்த ஒரு நாட்டிற்கு இரசிகராயிருக்கும் ஒரு இரசிகன், பொதுவாக நல்லதொரு கிரிக்கெட் வீரனை இரசிப்பான். அந்த வகையில் என்னைப் பொறுத்தவரையில் சச்சின், லாரா, கில்கிறிஸ்ட், ரணதுங்க, மஹேல, டிராவிட், அம்லா, கலிஸ் போன்ற வீர்களின் வரிசையில் நிச்சயம் சங்காவிற்கான இடம் முன்னணியில் உண்டு என்பதை யாராலும் இலகுவாக மறுக்க முடியாது.
-கிருத்திகன் நடராஜா-