வன்னியன் வலிமை வாழ்ந்து
வரலாறு படைத்த மண்.
நூற்றாண்டு அடிமை கொண்ட
வெள்ளையரிடம் அடங்காது
சினங்கொண்டு எழுந்த மண்.
புகழ் பண்டாரவன்னியனை
கற்சிலையில் பொற்சிலையாய்
பெற்றெடுத்து வரலாறு கண்ட மண்.
கொரில்லாப் போர் புகழ்
வன்னியரே என வெள்ளையனின்
வரலாற்றிலும் நிமிர்ந்த மண்.
பின்னாலில் வரலாற்றிலும் அதனைப்
பறைசாற்றிய மண்.
காடென்றும் சகதியென்றும்
யாழ் ஓடிய ஆச்சி அப்பு,அதன்
வேகமான வளர்ச்சியதை
உழைத்தே நிறைவாய் காட்டிய மண்
வன்னி மண் எனை வளர்த்த மண்.
குளங்கள் வெட்டி மழை காத்து
பசுமை எங்கும் நிறை காத்த மண்.
விவசாயம், வியாபாரம், கைத்தொழில்
உழைப்பாலே பலன் கண்ட மண்.
யுத்தத்தில் இடம்பெயர்ந்த
பல்லாயிரம் மக்களுக்கு
ஆதரவுக்கரம் தந்த மண்.
சாதியென்றும் சமயமென்றும்
நீதியற்ற பேதம் அறியா முல்லை மண்.
கோயில்கள்,தேவாலயங்கள்.
மசூதிகள் விகாரைகள்
புனிதம், அதை மதித்த மண்.
யாழ்பீடம்,கல்லூரி,தொழில்நுட்பம்
கலாமன்றம்,நகரசபை,நூலகம்
அறிவோடு கலைகளும் அழகாக
சிறந்த மண்.
கல்வாரி மலையிலே
சிலுவை சுமந்த யேசு போல்
பொல்லாத துயரங்களைச்
சுமந்த மண்.
-குமுதினி ரமணன்-
ஜேர்மனி.