என் கண்ணன் வரும் நேரம்..

775


THoli

விண் மீன்கள் வழி பார்த்து
கடல் மீன்கள் வளம் பார்த்து
என் கண் மீன்கள் துயர் தீர
வரும் நேரம் தோழி என் கண்ணன் வரும் நேரம் தோழி.



ஊர் உறங்கும் சாமத்தில் என் கண் உறங்கா ஏக்கத்தில் உயிர் வாங்கிச் சென்றான் தோழி.
உயிர் மீட்டு வருகிறான் தோழி என் உயிர்
மீட்டு வருகிறான் தோழி.

கடற் காற்றில் உயிர் கொடுத்து– நான்
கட்டி வைச்ச காதல் கோட்டை
அலைகடல் அழித்திடுமா தோழி
அந்த ஆழ் கடலும் பெண்தானே தோழி.



மன அலையில் உயிர் மோதி
தூக்கம் கெட்டு துடித்தெழுந்த
நினைவலையை மீட்ட மச்சான் தோழி.
என் நினைவலையை மீட்ட மச்சான் தோழி.



ஆசையெல்லாம் பொத்தி வைச்சு
ஆழ்கடலில் அனுப்பி வைச்சு
நான் காத்திருக்கும் பொன் நேரம் தோழி
ஆராத்தி எடுத்திடவா தோழி.


விண் மீன்கள் வழி பார்த்து
கடல் மீன்கள் வளம் பார்த்து
என் கண் மீன்கள் துயர் தீர வரும் நேரம் தோழி.
என் கண்ணன் வரும் நேரம் தோழி.

-குமுதினி ரமணன்-