மேற்படிப்பை தொடர்வதற்காக வவுனியாவில் இருந்து லண்டன் சென்ற பெண் லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தனது மகள் கடந்த 6ஆம் திகதி கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய குணராசா மயூரதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார். தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.