வாழ்க்கை வரமா பாரமா?

838


Vaalkkai

வாழ்வதற்காய் பிறந்தவர்கள் நாம் உயர்வாய்
வாழ்வின் பொருள்ளுணர்ந்து வாழ்தல் வேண்டும்.
வீழ்வதெல்லாம் வெற்றியின்முதல் படியாக எண்ணி
வீழ்ந்தே கிடந்திடாமல் எழுதல் நன்றே.
ஏழ்மை நிலை வந்தெம்மை வாட்டினாலும்
எளிமைகாத்து பொறுமையுடன் வாழ வேண்டும்.



தேடியவர் செல்வம் செல்லும் போது
தேகமதன் உயிர் பிரிவைத் தடுத்ததில்லை.
நாடியவருக்கு ஈயாத குணம் படைத்திடார்
நாளும் பாரமவர் உலகிற்குத் துன்பம்.
வாடியவர் மனம் கண்டு வாட்டம் கொள்ளார்
வாழும் வாழ்விலும் அர்த்தமுண்டோ.

புகழ் வந்து உச்சியிலே சென்றபோதும்
எளிமை பேணும் குணம் வரமே.
இகழ் சேர்ந்துன்னைச் சாய்த்த போதும்
இழந்திடாத துணிவில் எதிர் கொள்வாய்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
அன்போடு பொறுமையும் காத்தல் அறமே.



தாய் அன்பிற்கு நிகராய் ஏதுமுண்டோ
தாயவள் பாசம் போல் செல்வமுண்டோ.
சேயாக சிறந்து நீயும் சிறப்புடனே
சீராட்டியவள் மனம் போற்ற வாழ வரமே.
நோய் கொண்டு பாயோடு படுத்திட்டாலும்
நோகாமல் தாயவள் நலம் காப்பாய்.



உழைப்பாலே உயர்ந்தவர்கள் கோடியுண்டு.
உலகில் உழைப்பவர்க்கே உயர்வான வாழ்வுண்டு.
பிழைப்பதற்கு உலகில் வழிகள் உண்டு.
பிரிந்திடாத முயற்ச்சி உனக்குள் வேண்டும்.
தழைத்திடும் வேட்டிடவே வாழை மீண்டும்.
தந்துவிடு நாளை உனதாக வென்று.


தரம் கண்டு படித்துவிடு வாழ்ந்தோர் நூல்கள்.
தனித்துவமாய் உறுதிபெறுவாய் உனக்குள் நீயே.
உரம் கொண்டு வளர்த்துவிடும் பயிரைப் போலே-நல்
உணர்வு கொண்டு உறுதிபெற்று வெல்வாய் நாளை.
வரம் என்று மாற்றிவிடு வாழ்வை நன்றே
பாரம் என்று எண்ணலாமோ வீணே.

விண் பொழியும் மழைக்குத் தடைதானுண்டோ.
விரைந்து வரும் கதிரவனை தடுப்போருண்டோ.
மண் விளைச்சல்தர மறந்த துண்டோ.
மனம் வைத்தாள் முடியாதது ஏதுமுண்டோ.
கண் வைத்து கருத்தாய் நாளும் முயன்று
கடமைதனை செய்திடப் பலனே உண்டு.


-குமுதினி ரமணன்-
யேர்மனி.