அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதலே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்கவைத்தது!!

600

அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதலே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்கவைத்து ஒரு மாணவனாக மாற்றியமைத்தது என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் ரங்கநாதன் ஜதுகுலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ரங்கநாதன் ஜதுகுலன் வர்த்தகப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். தனது வெற்றி குறித்து மாணவன் தெரிவித்ததாவது..

எமது பாடசாலை வரலாற்றிலும், வவுனியா வடக்கு வலயத்தின் வரலாற்றிலும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெறுவது இதுவே முதல் தடவை.

அந்த நிலைக்கு நான் வருவதற்கு எனக்கு வழிகாட்டிய எனது பாடசாலையின் முன்னைநாள் அதிபர் அமிர்தலிங்கம், தற்போதைய அதிபர் சுபாஸ்கரன், எனக்கு கற்பித்த கணக்கீடு ஆசிரியர் நிமால், பொருளியல் ஆசிரியர் ஞானேஸ்வரன், வர்த்தக ஆசிரியர் சிவாஜின் ஆகியோருக்கும் எனக்கு நிதி உதவிகளை வழங்கியவர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இதற்கு மேலாக அப்பா இல்லாத போதும் அம்மாவின் வழிகாட்டுதல்களே என்னை வவுனியா மாவட்டத்தில் சாதிக்க கூடிய ஒரு மாணவனாக மாற்றியமைத்தது.

எதிர்காலத்தில் ஒரு கணக்காளராக வரவேண்டும். இன்னும் படிக்க வேண்டும் என்பதே எனது அவா எனத் தெரிவித்தார்.