வவுனியா பஸ் நிலையத்தில் பதற்றம் : பொலிஸார் குவிப்பு!!

786

 
இன்று (17.01.2017) காலை அரச பேரூந்து நிலையத்திற்குச் சென்ற பொலிசார் அரச பேரூந்துகளை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பேரூந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பேரூந்து நிலையத்தில் நின்ற பேரூந்து சாரதிகள், நடத்துநர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இருபகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தனியார் பேரூந்து ஒன்று அரச பேரூந்து தரிப்பிடத்திற்குள் நுழைந்ததையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே மோதல் தோன்றியது.

இதனிடையே வவுனியா வர்த்தக சங்கத்தினரும் பேரூந்து தரிப்பிடத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் அரச பேரூந்து சாரதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரூந்து நிலையப்பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை மூடி தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

எனினும் பதற்றமான நிலை அப்பகுதி எங்கும் நீடித்து வவுனியா பொலிஸ் நிலையம் வரை நீடித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11.30 மணியளவில் பொலிசாரின் தலையீட்டையடுத்து அரச மற்றும் தனியார் பேரூந்து சங்க உறுப்பினர்களிடையே வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேரூந்துக்களை செல்விடாமல் அரச மற்றும் தனியார் பேரூந்து சாரதிகள் பேரூந்துக்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர்.

மேலும் அக்கறைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேரூந்து வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேரூந்து சாரதிகளால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இரு பகுதியினரையும் அழைத்துச் சென்ற பொலிசார் வரும்வரை வழிவிடமுடியாது என்று தெரிவித்து வீதியை மறித்து போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் பிரதி நிதிகளும் பேரூந்து நிலையத்திற்குச் சென்று அரச தனியார் பேரூந்து சாரதிகளுடன் கலந்துரையாடினார்கள்.

இதனிடையே பொலிசாருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வர்த்தகர் சங்கம் தனியார் அரச பேரூந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னைய நடைமுறையினை ஒரு சுமுகமான சூழ்நிலை உருவாகும் வரை பின்பற்றுமாறு பொலிசார் அரச பேரூந்து ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வர்த்தகர் சங்கத்தினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச பேரூந்துகள் தமது சேவையினை மேற்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை புதிய பேரூந்து நிலையத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த தனியார் பேரூந்துகள் முன்னைய நடைமுறையினை பின்பற்ற முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். பிற்பகல் 12.20மணியளவில் இருந்து பதற்றமான சூழ்நிலை அகன்று வருகின்றது. எனினும் பெருமளவானவர்கள் இருபகுதியிலும் காணக்கூடியதாகவுள்ளது.

பொலிசார் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.