ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் பிறப்பிக்கப்படும்.
இதனைத்தொடர்ந்து, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு ஓரிரு நாட்களில் அவரச சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கூறியுள்ளார்.இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.
பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பை மாணவர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும் வாடிவாசல் திறந்து, அதனுள் இருந்து காளைகள் சீறிப்பாயும் காட்சியை பார்க்கும் வரை நாங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என கூறியுள்ளனர்.மேலும், இது உலக தமிழர்களுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.