பெயர்க் குழப்பத்தால் பறிபோன ஐ.பி.எல். வாய்ப்பு!!

325

பெயரில் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் மத்திய பிரதேச மானில வீரர் ஹர்ப்ரீத் சிங்.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் கடந்த திங்களன்று நடைபெற்றது. அதற்கு முந்தைய தினம் இரவு, மும்பையின் அந்தேரி ரயில்வே நிலையத்தின் நடைமேடையில் விதிமுறைகளுக்கு எதிராக காரைச் செலுத்திச் சென்ற குற்றத்திற்காக மும்பையைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளரான ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.

இச்செய்தியை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட ஏ.என்.ஐ. என்ற இந்திய செய்தி ஊடகம் , தவறுதலாக ஹர்ப்ரீத் சிங் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக அடையாளம் காணப்பட்ட ஹர்ப்ரீத் சிங்குக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கொடுப்பதற்கு சில அணிகள் தயாராகவே இருந்தன. என்றாலும், அவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியிருப்பதை அறிந்த ஏல நிர்வாகிகள் அவரது பெயரை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டனர்.

இரண்டு நாட்களின் பின் நேற்று இந்தத் தவறைக் கண்டுபிடித்த ஏ.என்.ஐ. நிறுவனம், கைது செய்யப்பட்டவர் ஹர்ப்ரீத் சிங் அல்ல, ஹர்மீத் சிங் தான் என்று குறிப்பிட்டு, தவறுக்காக வருத்தம் தெரிவித்தது. எனினும், ஏலம் நிறைவடைந்து விட்டிருந்ததால் ஐ.பி.எல். வாய்ப்பைத் தவறவிட்டார் ஹர்ப்ரீத் சிங்!

ஏலத்துக்கு முந்தைய வாரம் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி நினைவுக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த முன்னணி வீரராக ஹர்ப்ரீத் சிங் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.