படகில் தனியொருவராக அத்திலாந்திக்கை கடந்து சாதனை!!

415

நின்றபடியே வலிக்கும் துடுப்புக்களுடன், தன்னந்தனியே, முதன்முதலாக அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் கிறிஸ் பேர்ட்டிஷ் என்ற தென்னாபிரிக்க நீர்ச்சறுக்கு வீரர். இதன்போது, ஒரே நாளில் எந்தவிதத் துணையும் இன்றி 71.96 கடல் மைல் தொலைவைக் கடந்து மற்றுமொரு சாதனையையும் கிறிஸ் படைத்துள்ளார்.

தனது சாதனைப் பயணத்துக்காகவென்றே சிறு தங்கும் அறை, சுறா மீன்களை அடையாளம் கண்டு தடுக்கும் தொழில்நுட்பம் உட்பட, சில நவீன அம்சங்களைக் கொண்ட ஒரு படகை அவர் வடிவமைத்திருந்தார்.கடந்த டிசம்பர் மாதம் மொரோக்கோவுக்குச் சொந்தமான கெனரி தீவில் இருந்து தனது சாதனைப் பயணத்தை கிறிஸ் ஆரம்பித்தார். ஏறக்குறைய 4,500 கடல் மைல் தொலைவை 93 நாட்களில் கடந்து, நேற்று (9) காலை அன்ட்டிகுவாவின் இங்க்லிஷ் துறைமுகத்தை வந்தடைந்தார்.

பயணத்தின்போது, மீன்கள் மற்றும் ஆமைகளின் தாக்குதல்கள், வழியில் தன்னைக் கடந்து சென்ற இராட்சத சரக்குக் கப்பல்கள் பற்றிய பதிவுகளை அவர் தனது முகநூல் கணக்கில் பதிவிடத் தவறவில்லை.தனது சாதனைப் பயணத்திற்காகக் கிடைத்த நன்கொடையான சுமார் நான்கு இலட்சம் டொலர்களைக் கொண்டு, தென்னாபிரிக்காவில் ஐந்து பாடசாலைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளார் கிறிஸ். எஞ்சும் பணத் தொகையில், அண்ணப்பிளவுகள் உள்ளிட்ட தோற்ற விகாரங்களுக்கு உள்ளானவர்களுக்கு மறுசீரமைப்பு சிகிச்சைகளை வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.