பயிற்சி பெற்ற நாயுடன் நடித்ததை விட மீனுடன் நடித்தது எனக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை தந்திருக்கிறது!!

246

சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் நாளை வெளியாகின்றது.

அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தை ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

“நாய்கள் ஜாக்கிரதை படத்தில் என்னுடன் நடித்தது, ஒரு நன்கு பயிற்சி பெற்ற நாய் என்பதால், எனக்கு நடிப்பதற்கு அவ்வளவு கடினமாக இல்லை. ஆனால் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் இந்த மீனுடன் நடித்தது சவாலாகவே இருந்தது. ஏனென்றால், சில காட்சிகளில் நாங்கள் நன்றாக நடித்து இருப்போம், ஆனால் அந்த காட்சிகளில் மீன் ஓடி விடும். எனவே நாங்கள் பல ‘ரீ டேக்’ எடுக்க வேண்டியதாக போய் விட்டது.

நான் நடித்த முந்தைய படங்களை விட ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் எனக்கு காதல் காட்சிகள் அதிகமாகவே இருக்கின்றது. ஆரம்பத்தில் எனக்கு பதட்டமாக இருந்தாலும், ஐஸ்வர்யா ராஜேஷின் சகஜமாக பழக கூடிய குணம், என்னை அந்த பதட்ட நிலையில் இருந்து வெளி கொண்டுவந்துவிட்டது.

சித்ரா லக்ஷ்மன் சார், லிவிங்ஸ்டன் சார் போன்ற மூத்த கலைஞர்கள், காளி வெங்கட், யோகி பாபு போன்ற புதிய கலைஞர்கள் மற்றும் பேபி மோனிக்கா என எல்லா தலைமுறை கலைஞர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் பெற்று தந்திருக்கிறது. நிச்சயமாக நாளை வெளியாகும் கட்டப்பாவ காணோம் திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.