வவுனியாவில் தொடரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்தகால நெற்செய்கைக் காலப்பகுதியில் இருந்து கடுமையான வறட்சியான காலநிலை நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகளின் தோட்டச் செய்கை நடவடிக்கைகள், சிறுபோக நெற்செய்கை என்பன பாதிப்படைந்துள்ளதுடன் அவை கடுமையான வெப்பம் காரணமாக கருகி காட்சியளிக்கின்றன. இதனால் மக்கள் நாளாந்த குடும்பச் செலவுகளை போக்குவதற்கு கூட சிரமப்படுகின்றனர்.
விவசாயத்துடன் இணைந்ததாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மக்கள் தமது கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இன்றி அவதிப்படுவதையும், வறட்சி காரணமாக மைதானம் போன்று காட்சியளிக்கும் குளப்பகுதிகளை கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளாக பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது.
வவுனியாவின் பல பகுதிகளில் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும், கிணறுகளில் தண்ணீர் வற்றியும் காணப்படுகின்றது. இவ்வாறாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர்.