அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!!

291

 
அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்று உயிரிழந்த யாழ். மீசாலை தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் ராஜிப் என்பவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவருடைய சடலம் நேற்று (15) இரவு சிங்கப்பூரிலிருந்து எஸ்.கிவ்.468 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு இன்று பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், மரணமடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை பிரேத பரிசோதனையில் இருந்து தெரிய வந்ததாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மரணமடைந்தவரின் உடற்பகுதி மேலதிக விசாரணைக்காக பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா சென்றிருந்த ராஜேந்திரன் ராஜிப்(32 வயது) என்ற இளைஞர் கடந்த இரண்டாம் திகதி பப்புவா நியுகினியா தடுப்பு முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், பல தடைகளுக்கு மத்தியில் இவருடைய சடலம் நேற்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.