முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறிய டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கினார்!!

341

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டெரல் ஹெயார் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டெரல் ஹெயார் (65) 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, முத்தையா முரளிதரன் பந்தை வீசி எறிவதாகக் கூறி ‘த்ரோ’ என்று அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், ‘நோ-பால்’ என்று அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன் பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை அடுத்து தொடர்ந்தும் நடுவராகப் பணியாற்றினார்.

அதேபோல், 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாகக் கூறி பாகிஸ்தான் அணிக்கு தடை விதித்தார். இதனால் சர்ச்சைக்குரிய நடுவர் என பெயர்பெற்றார்.

தனது நடுவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு மதுபானக் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்தக் கடையில் பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்தை டெரல் ஹெயார் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு 18 மாத கால நன்னடத்தை உறுதிமொழிப் பத்திரம் வழங்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் அவர் 18 மாதங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடாமல் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வெளியில் சுதந்திரமாக வாழலாம்.