அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படுவர்!!

242

அண்மையில் கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டன. இவற்றில் ஒரு சில அதிபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறான அதிபர்கள் உரிய முறையில் இனம் காணப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஒரு சில மலையக பாடசாலைகளில் இருந்து மேற்படி விடயங்கள் தொடர்பாக எனக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அது மாத்திரமன்றி கல்வி அமைச்சின் மூலமாக மிக விரைவில் சுற்று நிருபம் ஒன்றையும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை அபிவிருத்தி செய்கின்ற நோக்கத்துடன் பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக பணம் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில அதிபர்கள் இந்த பணம் கிடைத்தவுடன் பாடசாலைகளில் வாசிகசாலைகளுக்கு பொறுப்பாக இருந்த ஆசிரியர்களை உடனடியாக நீக்கிவிட்டு அந்த பதவியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன் மூலம் அதிபர்கள் ஏதோ ஒரு விடயத்தை திட்டமிடுவது தெளிவாக தெரிகின்றது. ஆனால், அதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. அதே நேரத்தில் சீருடைகள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கிடைத்துள்ளது. அதிபர்கள் சிலர் தற்பொழுது துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதனை கல்வி அமைச்சு எந்த வகையிலும் அனுமதிக்காது. அரசாங்கம் மாணவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த பணத்தை பிழையான முறையில் கையாள முடியாது. பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் அவர்கள் உரிய முறையில் புத்தகங்களை கொள்வனவு செய்து அவற்றை முறையாக பட்டியலிட்டு அதனை வாசிகசாலைக்கு பொறுப்பான ஆசிரியர் கையொப்பமிட்டு, பின் அதிபர் உறுதிப்படுத்தி கல்வி அமைச்சிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசாங்கம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வளங்களை வழங்கி வருகின்றது. அதனை எமது பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நான் பல சிரமங்களுக்கு மத்தியில் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதனை ஒரு சில அதிபர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களை எந்த காரணம் கொண்டும் மண்ணிக்க முடியாது.

இது தொடர்பாக பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் ஆகியோரும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக எந்தவித தயவு தாட்சன்யமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.