யாழில் பீதியை ஏற்படுத்தியுள்ள பேய் நடமாட்டம் : புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை?

247

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் பேய், பிசாசு நடமாட்டம் மற்றும் அமானுஷ்ய சக்திகள் குறித்து இன்று காலை முதல் பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ். சிற்றங்காடி தொகுதியின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள் உள்ளிட்ட அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும், திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதியின் வியாபாரிகள் கவலை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த சிற்றங்காடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நட்டத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பகுதியில் நடமாடும் அமானுஷ்ய சக்திகள் தான் இதற்கெல்லாம் காரணம் என வியாபாரிகள் கவலை வெளியிட்டிருந்த நிலையில், அது குறித்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையிலலேயே தற்போது அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் குறித்து பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.