தடைகளைத் தாண்டி வௌியீட்டுக்கு தயாராகும் பத்மாவத்!!

346

பல்வேறு தடைகளைத் தாண்டி பத்மாவத் படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. படம் வெளியாகும் நாளில் நடிகை தீபிகா படுகோனே ரசிகர்களுடன் படம் பார்ப்பதாக கூறப்படுகிறது.

நடிகை தீபிகா படுகோனே நடித்த சித்தூர் ராணி பத்மாவதியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் படத்தின் தலைப்பு பத்மாவத் என மாற்றம் செய்யப்பட்டும், சில காட்சிகள் நீக்கப்பட்டும், கனவு பாடல் காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து படத்தின் தணிக்கை குழு ‘யு/ஏ’ என அனைவரும் பார்க்கும் வகையிலான சான்றிதழ் அளித்து அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து தடைகளையும் நீக்கியதை தொடர்ந்து படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி பத்மாவத் படம் இந்தியா முழுவதும் வெளியாகின்றது. இது தவிர 60 நாடுகளிலும் படம் திரையிடப்படுகிறது.

மும்பையில் பத்மாவத் படம் வெளியாகும் திரையரங்குகளில் அந்தப் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நேரில் தோன்றுகிறார்கள். ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தணிக்கை குழு அனுமதி அளித்த பின்பும், ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவத் படத்திற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணி பத்மினியின் தியாகம் மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அவரது தியாகத்தை பெருமையாக கருதுகிறார்கள்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு எதிரான எதையும் அனுமதிக்க மாட்டோம். எந்த விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.