கடந்த சில மாதங்களாக “வவுனியா பொடியன்” என்ற பெயரில் முகப்புத்தக கணக்கொன்றை இயக்கி வந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் “வவுனியா பொடியன்” என்ற பெயரில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்தான்.
இது மட்டுமல்லாது, இவனும், இவனது நண்பர்கள் சிலரும் மற்றும் வெளிநாடுகள் வசிக்கும் இவர்களின் நண்பர்கள் சிலரும் இணைந்து பல போலி பேஸ்புக் பக்கங்களை ஆரம்பித்து, அரசியல் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியைகள் சமூகத்தில் மிகவும் அறியப்பட்டவர்களை புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்தனர்.
இவற்றில் பல முகநூல்கள் (உன்னைப் போல் ஒருவன், நியாயமான விசாரணை, வவுனியா தமிழன்) பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்போது “வவுனியா பொடியன்” – தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பல போலி முகநூல்களை இயக்கி வந்தனர். இதனைத் தொடர்ந்து வவுனியாவில் உள்ள சிலரால் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக இவர்களில் ஒருவரான மேற்படி கிருசாந்த் என்ற 16 வயது சிறுவன் நேற்றிரவு கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு அவரது முகநூலும் கைப்பற்றப்பட்ட பின்னர் அப்பிரதேச கிராம அலுவலகர் மூலம் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
மேலும் இவரது நண்பர்கள் சிலரும் கைது செய்யப்பட உள்ளதுடன், இவர்களுக்காக வெளிநாட்டில் இருந்து செயல்படுபர்களின் போலி முகநூல்களும் கைப்பற்றப்பட்டு சம்பந்தப் பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சி நடைபெற்றுவருகின்றது.
இதேவேளை மேற்படி இளைஞன் “கிருசாந்த் கிரு” எனும் தனது பெயரிலும், உண்மையான முகநூலை நடத்தி வந்துள்ளான். அதில் தனது பாடசாலை ஆசிரியர்கள், ரியூசன் ஆசிரியர்கள், மற்றும் தனது நண்பர்களை புகழ்ந்து எழுதியுள்ள இவன், இந்த போலி முகநூல்கள் மூலம் அவர்களை அவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.