இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி!!

580

SL

புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் தங்களது கோரிக்கையை ஏற்க மேற்க்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மறுத்ததால் ஆத்திரமடைந்த மேற்க்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியிலேயே பின்வாங்கினார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தை மேற்க்கிந்திய தீவுகள் திடீரென ரத்து செய்ததால், இலங்கையுடன் இந்தியா விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.

கட்டாக், ஐதாராபாத், ராஞ்சி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் வரும் நவம்பர் 2-14 வரை நடைபெறுகிறது. வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடுகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது. அணியில் இடம் பெற்ற வீரர்கள் வருமாறு..

ஏஞ்சலோ மத்யூஸ் (தலைவர்), குசல் பெரேரா, தில்ஷான், உபுல் தரங்க, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, அஷன் பிரியஞ்சன், நிரோஷன் டிக்வெல்லா, திஷரா பெரேரா, நுவன் குலசேகர, தம்மிக்கா பிரசாத், லாகிரு, சதுரங்க டி சில்வா, எஸ்.பிரசன்ன, மற்றும் சுராஜ் ராந்திவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க அணியில் இடம் பெறவில்லை. அதேபோல், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுராஜ் ரந்தீவ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள குமார் சங்கக்கார ஒருவேளை தகுதி பெறவில்லை என்றால் நிரோஷன் டிக்வெல்ல அணிக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.