வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை சந்தித்த சி.வி.விக்னேஸ்வரன் : காணி தருவதாக அழைத்தால் எமக்கு உடன் அறிவியுங்கள்!!

327

CV1

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களை நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று சந்தித்தார்.

வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது மக்கள் அவரிடம் தமது இன்னல்களை எடுத்துக்கூறியதுடன் தாம் தற்போது வசிக்கும் நலன்புரி நிலையம் அமைத்துள்ள அரச காணிகளில் இருந்து வெளியேறுமாறு அரச அதிகாரிகளால் பலவந்தப்படுவதாக தெரிவித்ததுடன் தமக்கு இக்காணிகளையே வழங்கி குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அம் மக்களின் நிலைப்பாடுகளை வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் முதலமைச்சருக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.

இச் சந்திப்பின்போது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சிதம்பரபுரம் நலன்புரி நிலையம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும் அரசாங்க அதிபர் இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சர் அரசாங்க அதிபருக்கு 3 தடவைகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஞாபகமூட்டல்கள் வழங்கப்பட்டபோதிலும் மக்களுக்கு காணி வழங்குவது செயற்படுத்தப்படவில்லை.

இங்குள்ள மக்கள் இங்கேயே வசிக்வும் விரும்புகின்றர். இவர்களின் இரண்டாவது தலைமுறையும் இங்கு வந்துள்ளது. அத்துடன் இவர்களுக்கான தொழில்வாய்ப்புகளும் இங்கேயே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் இங்கிருந்த வேறு இடத்திற்கு செல்ல முடியாது.

இந்த காணிகளை இங்குள்ள மக்களுக்கு வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. போதுமான காணி காணப்படுகின்றது. அரை ஏக்கர் வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்க முடியும் என ஆணித்தரமாக முதலமைச்சருக்கு அவ்விடத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் முகாம் பற்றியும் அம் மக்கள் அவ்விடத்திலேயே குடியமர்த்தப்பட வேண்டிய தேவை பற்றியும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இதன்போது முகாமில் உள்ளவர்கள் தாம் படும் இன்னல்கைள முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இவற்றை செவிமடுத்த முதலமைச்சர் இவ் விடயம் தொடர்பாக மீண்டும் ஒருமுறை ஒருங்கணைப்பு குழு கூட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவோம் என அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் தெரிவித்திருந்ததுடன் அங்கிருந்த மக்களிடம் இவ் விடயத்தை நானாக செய்ய முடியுமாக இருந்தால் நான் செய்துவிடுவேன். அதனால் நாங்கள் தருவதாக கூறவில்லை. பார்க்கின்றோம் என்றே கூறியுள்ளோம். எனினும் இந்த முறை உரிய நடவடிக்கை எடுப்போம்.

இந் நிலையில் நீங்கள் தொடர்ந்தும் இங்கேயே இருப்பதற்கு பாருங்கள். அதற்கான நடவடிக்கையை நாம் எடுப்போம். நீங்கள் வேறு இடங்களில் காணி தருவதாக கூறி யாராவது அழைத்து செல்ல முற்பட்டால் எங்கும் செல்லாதீர்கள். இது தொடர்பில் சுகாதார அமைச்சருக்கு உடன் அறிவியுங்கள். வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் அவருக்கு உடன் அறிவியுங்கள்.

நாங்கள் தற்போது மத்திய அரசுடன் இவ்விடயம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கின்றோம் எனவே விரைவில் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.