இரு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போதகர் கைது!!

276

Arrested

சட்டப்படி இரு திருமணங்களைச் செய்து கொண்ட போதகர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இங்கினிமிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

சந்தேக நபர் நவகத்தேகம மெருன்கொட பிரதேசத்தில் முதலாவது திருமணத்தைச் செய்து கொண்டுள்ளார். இத்திருமணத்தின் மூலம் சந்தேக நபருக்கு ஐந்து வயதுக் குழந்தை ஒன்றும் உள்ள நிலையில் தலவாக்கலை பிரதேசத்திற்கு சமயப் பணி நிமித்தம் சென்றுள்ள சந்தேக நபர் அங்கு யுவதி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவ்யுவதியையும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர்

தனது இரண்டாவது மனைவியை வெளிநாட்டுத் தொழிலுக்காக அனுப்பி அதன் காரணமாக தொழில் முகவரால் அவருக்கு சுமார் இரண்டு இலட்சம் பணமும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டாவது மனைவி வெளிநாடு சென்றதன் பின்னர் சந்தேக நபர் மீண்டும் நவகத்தேகம தனது முதல் மனைவியின் வீட்டுக்கு வந்துள்ளார். இதன் பின்னர் இரண்டாவது மனைவியின் உறவினர்கள் நவகத்தேகம பிரதேசத்திற்கு வந்து நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ம் திகதி முறைப்பாடு செய்துள்ளதோடு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தலவாக்கலை இரண்டாவது மனைவியின் வீட்டிலிருந்து எடுத்து வந்ததாகச் சொல்லப்படும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் பொலிஸார் நவகத்தேகம வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள நவகத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.