வவுனியா நெடுக்குளம் பகுதியில் வசித்துவரும் வேவத்தெக விக்கிரமசூரிய என்ற 60வயது வயோதிபர் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலக வாகனத்தரிப்பிடக் கூரைமீது ஏறி தனக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோரி இன்று (24.06) காலை10.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நெடுக்குளம் மினிமறிச்சகுளம் பகுதியிலுள்ள தனது தந்தைக்குரிய ஒரு ஏக்கர் வயல் காணியின் பின் உரித்து தனது பெயரிலுள்ளதாகவும் அதை மாற்றி தனது சகோதரியின் மகனான சமன்குமார என்பவருக்கு அக்காணியினை தற்போது பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அவ் வயல் காணியினை தனக்குப் பெற்றுத்தருமாறும் கோரியே இப் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா நெற் செய்தியாளர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, 1956ம் ஆண்டு இவரின் தந்தையான வேலாசகே இவ் வயல் காணியினை பதிவு செய்துள்ளதாகவும் அப்போது இதன் பின் உரித்தினை மகனாகிய விக்கிரமசூரிய இவரின் பெயரிலேயே இருந்துள்ளது.
அதன் பின்னர் 1982ம் ஆண்டு தந்தையாரால் மகளின் மகனான (பேரனுக்கு) பின்னுரித்தை சாட்டியுள்ளார். தற்பொது தந்தையார் உயிருடன் இல்லை. பின்னுரித்து யார் பெயரில் உள்ளதோ அவர்தான் காணியின் சொந்தக்காரர் என்பதை காணி உத்தியோகத்தரான உபாலி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.
-பிராந்திய செய்தியாளர்-