தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்பார்கள் எனத் தெரிவித்த சபை முதல்வரும் முன்னாள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அமைச்சர்கள் எண்ணிக்கை தொடர்பில் பாராளுமன்ற அனுமதியை கோரும் விசேட பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
சபை முதல்வராக தெரிவான லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி. நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை தன்னிச்சையாகவே அதிகரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்படவில்லை.
ஆனால் எமது ஆட்சியில் 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு அதற்கமைய தேசிய அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பாக பாராளுமன்ற அனுமதி கோரப்படவுள்ளது. அதற்காகவே இன்று பாராளுமன்றமும் விசேட அமர்வு இடம்பெறுகின்றது.
புதிய அரசின் அமைச்சர்கள் பதவியேற்பு நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும்.
ஐ.தே.முன்னணி சார்பில் அமைச்சர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்வார். அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்ந்த அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்வார்.
அமைச்சர்களின் எண்ணிக்கை எவ்வாறு எனக்கூற முடியாதென்றும் லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.