தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்நாட்டில் இனவாதம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.
அது மாத்திரமின்றி இரத்தம் சிந்தாது ஏற்படுத்தப்பட்ட புரட்சியின் வெற்றியாகவே இதனை பார்க்கின்றேன். எனவே அவருக்கும் குழுக்களின் பிரதித் தலைவராக பதவியேற்றுள்ள செல்வம் அடைக்கலநாதனுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.யான டிலான் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாடி வளர்த்த சிலர் இன்னும் இந்த சபையில் இருந்து இனவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இனவாதத்திற்கு எதிராக போராடிய இரா.சம்பந்தன் இன்று எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே இன்று கொதித்துப் போயுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் பதவி சம்பந்தனுகே செல்ல வேண்டும் என்று ஒருவாரத்திற்கு முன்னரே நான் எண்ணம் கொன்டிருந்தேன். எனது எண்ணமும் பிரார்த்தனையும் நிறைவேறியுள்ளது. இதனால் நான் ஆனந்தக் கண்ணீர் விடுகின்றேன்.
குழுக்களின் பிரதித் தலைவராகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியுள்ளார். அதேபோன்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசா நாயக்க தெரிவாகியுள்ளார். இது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் உள்ளது. இன்று இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இதனையே நாட்டு மக்கள் எதிர்பார்த்திருந்தனர் அது இன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் சுதந்திரக் கட்சியை சாராத சிலர் இன்னும் இனவாதத்தை பரப்ப முற்படுகின்றனர். நாட்டு மக்கள் இனவாதத்தை முறியடித்து விட்டனர். சுதந்திரக் கட்சியை அல்லாதவர்கள் எவரும் எமது கட்சி பற்றி பேச வேண்டிய தேவை இனியும் கிடையாது.
இன்று எமது நாட்டில் எழுந்துள்ள முன்னேற்றகரமான நிலைமையை சர்வதேசம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. எமது இத் திட்டம் எப்போது சீரழியும் என்று ஒரு கூட்டத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர். எனவே ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து இந்த பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்றார்.