வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதால், பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
நேற்று மாலை தலைமன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கல்கமுவை- அம்பன்பொல பகுதியில் தடம்புரண்டது.
இதன்காரணமாக வடபகுதிக்கான இரவு நேர ரயில் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன.
தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்ற எடுத்த முயற்சிகள் நேற்று இரவு வரை கைகூடவில்லை. மேலும், ரயில்தடம் புரண்ட பகுதியில் தண்டவாளம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று மாலை கொழும்பிலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு பயணிக்கவிருந்த ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தது..
அதேபோன்று காங்கேசன்துறை மற்றும் தலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்க தயாராகவிருந்த இரண்டு ரயில்களும் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று நள்ளிரவு 12.30 அளவில் தடம்புரண்ட இரயில் மீண்டும் சீர்செய்யப்பட்ட நிலையில், இன்று சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.