வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 3ம் இடத்தை பெற்று வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்த மயூரி சுப்ரமணியம் அவர்கள் வவுனியா நெற் இணையத்திற்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் பின்வருமாறு தெரிவித்தார்.
எனது பெயர் மயூரி சுப்ரமணியம் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றேன். வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் 3A சித்தி பெற்று மாவட்ட ரீதியில் 3ம் இடத்தினை பெற்றுள்ளேன்.
கஸ்டத்தின் மத்தியிலும் எனது அப்பா என்னை கல்வி கற்க வைத்தார். நான் எனது குடும்பத்தின் கஸ்டத்தினை நினைத்து நன்றாக கல்வி பயின்றேன். புலமைப் பரிசில் பரீட்சையில் 118 புள்ளிகளைப் பெற்றேன் . ஆனால் வெட்டுப்புள்ளி 122 ஆகக் காணப்பட்டது. நான்கு புள்ளிகளால் புலமைப்பரீட்சையில் என்னால் சித்தியடைய முடியவில்லை. என்னை இந்த விடயம் சோகத்தில் ஆழ்த்தியது.
இருந்த பொழுதும் எனது முயற்சியை கைவிடவில்லை ஊக்கத்துடன் கல்வி பயின்று சாதாரண தரப்பரீட்சையில் 8A,1S பெறுபேற்றினைப் பெற்றேன்.
எனது குடும்பம் எனது படிப்பிற்காக படும் கஸ்டத்தினை உணர்ந்து இரவு 10.30 மணிவரை கல்வி பயில்வேன். அதிகாலை 4 மணிக்கு நான் கல்வி பயிலும் பொழுது எனது அம்மா தேனீர் தயாரித்துத் தருவார். எனது இந்த வெற்றிக்கு காரணம் எனது குடும்பத்தினர் தான். உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 3ம் இடத்தினை நான் அடைந்தது மிக்க மகிழ்ச்சியாகக் காணப்படுகின்றது.
நான் மீட்டல் பயிற்சி புத்தகங்களை எனது நண்பிகளிடம் வாங்கித் தான் கல்வி கற்றேன். எனது அப்பாவின் கனவு வைத்தியர் ஆக வேண்டும் என்பது. அப்பா தினமும் கூறுவார் ‘நான் கஸ்டத்தில் மத்தியிலும் உன்னை கல்வி கற்க வைக்கின்றேன் நன்றாக படித்து வைத்தியர் ஆக வேண்டும்’ என.
மருத்துவம் படித்து மகப்பேற்று நிபுணர் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். எனது வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றியை கூறுவதுடன் , பாடசாலை அதிபர் , அனைத்து ஆசிரியர்கள், நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் வவுனியா நெற் இணையம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த இவருக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.