வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட பரீட்சையையடுத்து வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகள் மற்றும் நேர்முகப் பரீட்சை தொடர்பாக விண்ணப்பதாரிகளான பட்டதாரிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக்கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வடமாகாண ஆளுநர் பளிஹக்கார உட்பட வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வடமாகாணப் பாடசாலைகளுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதியன்று பட்டதாரிகளுக்கிடையே போட்டிப் பரீட்சை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளி மற்றும் நேர்முகப் பரீட்சை தொடர்பாகவும் விண்ணப்பதாரிகளாகிய பட்டதாரிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தெளிவுபடுத்தி நியாயம் கோருவதற்காக இக்கடிதத்தினைத் தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.
வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரிய சேவையின் 3 ஆம் வகுப்பு-1(அ) தரப் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வடமாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய வெட்டுப்புள்ளிகள் ஒரே பட்டத் தகுதிகளைப் பெற்ற மேற்படி பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளிடையே மன உளைச்சலினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 117, வவுனியா மாவட்டத்திற்கு 95, கிளிநொச்சி மாவட்டத்திற்கு 84, மன்னார் மாவட்டத்திற்கு 81, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 80 என வேறுபட்ட வகையில் வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் போட்டிப்பரீட்சையில் இரு பாடங்களிலும் (நுண்ணறிவுப் பரீட்சை, பொது அறிவு) 40 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மேற்படி பரீட்சையில் இரு பாடங்களிலும் 40 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றும் 117 வெட்டுப்புள்ளி இலக்கினையடையாத யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வெட்டுப்புள்ளி அறிமுகமானது க.பொ.த உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையின் உள்வாங்கலில் ஏற்றுக்கொள்ளமுடியும். ஏனெனில் மாவட்டங்களின் மாணவர்களுடைய விகிதாசாரம் மற்றும் கற்றலுக்கான பௌதீகவளச்சூழல் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.
ஆனால் ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப்பரீட்சை எழுதிய பட்டதாரிகளைப் பொறுத்தவரை பெரும்பாலானோர் ஒரே பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட பாடங்களை ஒரே சூழலிலேயே கற்றுள்ளனர். இது இவ்வாறு இருக்க மாவட்டங்களுக்கெனத் தனித்தனியாக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டமை எந்தவகையில் நியாயமாகும்? குறிப்பாக பிற மாவட்டத்தில் 80 புள்ளிகள் பெற்ற ஒருவர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்க யாழ்ப்பாணத்தில் 116 புள்ளிகள் பெற்றவர் தட்டிக்கழிக்கப்படுவது எவ்வகையில் அறிவுபூர்வமானது?
போட்டிப்பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பதாரிகளை உள்ளீர்ப்பதற்காகப் பரீட்சையினை நடத்திவிட்டு இவ்வாறான குறைபாடுகளுடைய வெட்டுப்புள்ளி அறிமுகமானது போட்டிப்பரீட்சையைக் கேலிக்கூத்தாக்கும் செயலாய் அமைகின்றது. பிற மாகாணங்களில் இவ்வாறான பிரிவினைகள் காட்டப்படுவதுமில்லை. வடமாகாணத்தில் இதுவரை நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் இத்தகைய முறை பின்பற்றப்பட்டிருக்கவுமில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வெட்டுப்புள்ளியினை அறிமுகப்படுத்தவேண்டும் அல்லது சித்தியடைந்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்துத் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்கவேண்டும்.
மேலும் வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கோரப்பட்ட மேற்படி பதவிக்கான போட்டிப்பரீட்சை விண்ணப்பப்படிவ விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பந்தி 2.2 இன் படி இது இடமாற்றத்திற்குரிய சேவையாகும். இந்நியமனம் பெறுபவர்கள் வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் சேவையாற்றத் தயாராக இருத்தல் வேண்டும் எனவும் பந்தி 2.3 இன் படி ஒரு சேவை நிலையத்தில் நியமனம் பெறும் ஆசிரியர், அதே சேவைநிலையத்தில் ஆகக் குறைந்தது 06 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்ற வேண்டும் என்பது கட்டாயசேவை நிபந்தனையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பொருத்தமான பட்டதாரிகளை குறி-த்த நியமனங்களுக்குள் உள்ளீர்க்க வேண்டு-மெனக் கேட்டுக்கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதியன்று நடை-பெறவுள்ள நேர்-மு-கப்பரீட்சைக்கு முன்னர் தீர்வி-னைப் பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட-வர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்ப-ட்டுள்ளது.