நேற்று (29.03.2016) காலை 5.50 மணியளவில் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் மீது தனியார் பேரூந்தின் நடத்துனர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வவுனியா பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்ட தனியார் பேரூந்தின் சாரதி , நடத்துனரைக் கைது செய்து இன்று வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர். இதனைக் கண்டித்து இன்று தனியார் பேரூந்தின் சாரதிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
எமது தனியார் பேரூந்தின் சாரதி, நடத்துனர் இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனரைத் தாக்கவில்லை. தனியார் பேரூந்தில் ஏறிய பயணிகளை இலங்கை போக்குவரத்துச் சபை நடத்துனர் வழிமறித்து இ.போ.சபை பேரூந்தில் ஏறுமாறு பணித்ததன் காரணமாக இ.போ.சபை ஊழியரை எவ்வாறு எமது பேரூந்தில் ஏறும் பயணிகளை நீங்கள் எவ்வாறு இ.போ.ச பேரூந்திற்கு அழைப்பிர்கள் என இ.போசபை நடத்துனரை தள்ளிவிட்டதாகவும், இ.போ.ச நடத்துனர் போலியான காரணத்தினைக் கூறி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார் எனவும் தனியார் பேரூந்தின் ஊழியர்கள் தெரிவித்தனர்.
பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தனியார் பேரூந்தின் ஊழியர்கள் ‘எமது சாரதி, நடத்துனருக்கு சரியான தீர்வு வேண்டும்’, ‘பக்க சார்பற்ற நீதி வேண்டும்’, ‘இணைந்த சேவை வழங்கு’ என பாதாதைகளை எந்திய வண்ணம் கவனயீர்ப்புப் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
முதலாம் குருக்குத்தெருவில் தரித்து நிற்கும் தனியார் பேரூந்தின் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட போதும் இலுப்பையடிச் சந்தியில் தரித்து நிற்கும் உள்ளுர் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.