தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் 39வது சிரார்த்த தினம் இன்று (26.04.2016) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளையின் ஏற்பாட்டில் வவுனியா மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இன் நிகழ்வுகளுக்கு முன்னர் தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் குருமன்காட்டிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகமான தாயகத்தில் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.