இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான்.
192 கிலோ எடை கொண்ட இந்தச் சிறுவன் தினந்தோறும் 5 வேளை உணவு உண்கின்றான்.
மீன், மாட்டிறைச்சி, காய்கரி சூப் போன்றவற்றை விரும்பி உண்ணும் ஆர்யா, வளர்ந்தவர்கள் இருவருக்குப் போதுமான உணவை ஒரே நேரத்தில் உண்கின்றான்.
நடக்கக் கூட முடியாத இச்சிறுவன், பள்ளி செல்வதை நிறுத்தி விட்டான்.
3.2 கிலோ எடையுடன் பிறந்த இச்சிறுவன் தற்போது சுவாசிப்பதற்குக்கூட சிரமப்பட்டு வருகிறான்.
இவனுக்குப் பொருந்தக்கூடிய உடைகளை வாங்கிக்கொடுக்க முடியாதுள்ளதால், பெற்றோர் இவனுக்கு சாரத்தை வாங்கு உடுத்தக் கொடுக்கின்றனர்.
சிறுவனின் உடல் எடை இப்படியே கூடிக்கொண்டு சென்றால் அவன் உயிரிழக்க நேரும் என பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
இதனால், ஆர்யாவிற்கு வழங்கும் உணவின் அளவைக் குறைத்துவிட்டனர்.
ஆர்யா உண்பதிலும் உறங்குவதிலும் மாத்திரமே நேரத்தை செலவிடுவதாகவும் சில நேரங்களில் குழியல் தொட்டிக்குள் சென்று படுத்துக்கொள்வதாகவும் அவனது அம்மா தெரிவித்துள்ளார்.
ரொக்கயா (35) அடே சொமன்ட்ரி (45) தம்பதியரின் இரண்டாவது மகனான ஆர்யா பிறந்த போது சாதரணமான 3.2 கிலோ எடையுடனே இருந்துள்ளான்.
அவனுக்கு இரண்டு வயது ஆன போது வயதுக்கு ஒத்த உடல் எடையைக் காட்டிலும் அதிகமாக இருந்துள்ளது. தொடர்ச்சியாக அவனது எடை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
விவசாயம் செய்து வரும் ஆர்யாவின் தந்தையால், தனது மகனுக்கு போதிய உணவை வாங்கிக் கொடுக்கவே பணம் போதுமானதாக இல்லை.
சில சமயங்களில் தனது மகனின் உணவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்த போது, குறைபாடுகள் எவையுமில்லை எனவும் பண வசதி இருந்தால் பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காண்பிக்குமாறும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தன்னால் அதிகளவான மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் ஏனைய சிறுவர்களைப் போன்று தனது மகனையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என நம்புவதாகவும் ஆர்யாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யாவின் பெற்றோர் தற்போது அவனுக்கு கட்டுப்பாடான உணவு வகைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.