தமிழ்நாட்டையை உலுக்கிய மிகப்பெரும் பரபரப்பு நிறைவுக்கு வந்தது : முழு விபரம் இணைப்பு!!

967

Swathi Murder

தமிழ்நாட்டையே பதற வைத்த பொறியியலாளர் சுவாதி கொலையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த மிகப்பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

சுவாதியை ஈவிரக்கமின்றி வெட்டி சாய்த்த கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்றிரவு பிடிபட்டான்.
இதுபற்றிய முழு விவரம் வருமாறு..

சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தான கோபாலகிருஷ்ணன்.

இவரது 2வது மகள் சுவாதி (வயது 24). இவர் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.

நுங்கம்பாக்கத்தில் இருந்து மின்சார ரயிலில் பரனூருக்கு தினமும் அவர் பணிக்கு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

கடந்த 24ம் திகதி காலை 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தபோது மர்ம இளைஞர் ஒருவர் அவரிடம் கடும் வாக்குவாதம் செய்தான்.

அடுத்த நிமிடம் அவன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை 4 தடவை வெட்டினான். இதில் கழுத்து, தாடையில் கடுமையாக வெட்டு காயம் அடைந்த சுவாதி ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே விழுந்து உயிரிழந்தார்.

சுவாதி கொலை செய்யப்பட்ட விதம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் மத்தியில் இந்த கொலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த கொலை பற்றி முதலில் ரெயில்வே பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சென்னை பொலிஸார் ஏற்றனர். 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. என்றாலும் குற்றவாளியை கண்டுபிடிப்பது பொலிஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

கொலையாளி யார் அவன் எதற்காக சுவாதியை கொலை செய்தான் என்பது கடந்த ஒரு வாரமாகவே மர்மமாக இருந்தது.

இந்த கொலையில் பொலிஸாருக்கு விசாரணை நடாத்துவதற்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த கொலையாளியின் படம் மட்டுமே உதவியாக இருந்தது.

அந்த படம் தெளிவில்லாமல் இருந்ததால் ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்தில் அது துல்லியமாக மேம்படுத்தப்பட்டு படம் வெளியிடப்பட்டது. அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது.

அந்த படத்தை பார்த்த சூளைமேட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதி காவலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கு தங்கி இருக்கும் ஒரு இளைஞர் போன்றே கொலையாளி இருப்பதாக அவர் உணர்ந்தார்.

அவர் நேற்று முன்தினம் இரவு இதுபற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொலிஸார் அந்த காவலாளியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது விடுதியில் தங்கியிருந்த ராம்குமார் என்ற இளைஞர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ராம்குமார் எங்கே என்று பொலிஸார் விசாரித்தனர்.

அப்போது 24, 25ம் திகதிகளில் அவன் விடுதியில் தங்கி இருந்து இருக்கிறான். அதன் பிறகு அவன் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி விட்டது தெரிய வந்தது. இதனால் ராம்குமார் மீதான சந்தேகம் வலுத்தது.

அவனது சொந்த ஊர் மற்றும் அவனை பற்றிய முழு விவரங்களையும் பொலிஸார் சேகரித்தனர். ராம்குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி பகுதியில் உள்ள தேன்பொத்தை, மீனாட்சிபுரம் என்ற சிறிய கிராமம் ஆகும்.

இதை அறிந்த தனிப்படைபொலிஸார் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து தென்காசி பொலிஸ் தலைமையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை பொலிஸார் நேற்று காலை முதல் மீனாட்சிபுரம் கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக கொலையாளி ராம்குமார் வீட்டையும், அவன் எங்கே செல்கிறான் என்பதையும் இரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் ராம்குமார் பக்கத்தில் உள்ள மலைப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றான். தனது வீட்டில் உள்ள ஆடுகளை அந்த பகுதிக்கு கொண்டு சென்றான்.

அவனை தனிப்படை பொலிஸார் பின் தொடர்ந்து சென்றனர். தூரத்தில் இருந்தபடியே அவனை படம் பிடித்தனர். அந்த படம் சென்னையில் உள்ள தனிப்படை பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கண்காணிப்பு கமராவில் பதிவாகி இருந்த படத்துடன் மீனாட்சிபுரத்தில் எடுக்கப்பட்ட கொலையாளியின் படத்தை தனிப்படை பொலிஸார் ஒப்பிட்டு பார்த்தனர்.

அப்போது சுவாதியை கொன்றவன் இந்த ராம்குமார்தான் என்பது தனிப்படை பொலிஸாருக்கு 100 சதவீதம் உறுதியாக தெரிய வந்தது.

இதையடுத்து ராம்குமாரை தப்பிக்க விடாமல் பிடிக்க வியூகம் வகுக்கப்பட்டது. ராம்குமாரை எப்போது, எப்படி பிடிப்பது நேற்று மதியம் நெல்லை பொலிஸார் ஆலோசனை நடத்தினார்கள்.

பகலில் ராம்குமாரை சுற்றி வளைத்தால் கிராமத்தில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று தனிப்படை பொலிஸார் கருதினார்கள்.
எனவே நள்ளிரவில் அவனை பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரவு 11 மணிக்கு 3 பொலிஸ் வான்களில் பொலிஸார் மீனாட்சிபுரம் கிராமத்தை சுற்றி வளைத்தனர்.

ஒரு பிரிவு பொலிஸார் கிராமத்தில் வெளி பகுதியில் அரண் போல நின்றனர். 5 பொலிஸார் மட்டும் கிராமத்துக்குள் சென்றனர். பொலிஸார் வருவதை அறிந்ததும் வீதியில் இருந்த நாய்கள் குலைத்தன.

என்றாலும் பொலிஸார் அதை சமாளித்து ராம்குமார் வீட்டுக்கு சென்றனர். சரியாக இரவு 11 மணிக்கு பொலிஸார் கொலையாளி ராம்குமாரின் வீட்டு கதவை தட்டினார்.

ராம்குமாரின் தந்தை பரமசிவம் கதவை திறந்தார். பொலிஸாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன பொலிஸ்காரங்க வந்திருக்காங்க என்று அவர் பயத்தில் அலறினார்.

இதை கேட்டதும் வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் அலறியடித்தபடி எழுந்தான். பொலிஸார் எப்படியோ தன்னை மோப்பம் பிடித்து சுற்றிவளைத்து விட்டார்களே என்ற அதிர்ச்சியுடன் அவன் வீட்டின் பின்பக்கமாக ஓடினான்.

தப்பி செல்ல அவன் முயன்றான். பொலிஸார் அவனை பிடிக்க விரட்டினார். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு கல்லில் மோதி தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

இதற்கிடையே வீட்டின் பின்பகுதிக்கு ஓடிய ராம்குமார் வீட்டை சுற்றி பொலிஸ் நிற்பதை அறிந்ததும் இனி தப்பிக்க முடியாது என்று உணர்ந்தான்.

உடனே அவன் தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தின் இரு பக்கமும் அறுத்து தற்கொலைக்கு முயன்றான். ரத்தம் பீறிட்டு வழிய அவன் அலறியபடி கீழே சாய்ந்தான்.

அதற்குள் பொலிஸார் அவனை சுற்றி வளைத்தனர். அவனை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் அவன் கழுத்தில் துணியால் கட்டினார்கள்.

பிறகு அவனை வானில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு 11.30 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராம்குமாருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தகவல் தெரிந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். ராம்குமாரை காப்பாற்ற கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை உணர்ந்த பொலிஸார் அவனை தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வந்தனர்.

அங்கு அவனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக இரவில் 5 வைத்தியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ராம்குமாரை காப்பாற்ற அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

வைத்தியர்கள் குழு இன்று அதிகாலை 3.15 மணிக்கு சிகிச்சை தொடங்கினார்கள். 5.15 மணி வரை 2 மணி நேரம் சிகிச்சை நீடித்தது. ராம்குமாரின் கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டன.

அதன் பின்னர் அவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அவனை மருத்துவர்கள் குழு கண்காணித்தது. இன்று காலை 7.30 மணிக்கு ராம்குமார் கண் விழித்தான்.

சுயநினைவு வந்தாலும் அவனால் முழுமையாக பேச முடியவில்லை. சுற்றி நின்ற பொலிஸாரை மிரட்சியுடன் பார்த்தான். பிறகு அவன் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

அடுத்தக் கட்டமாக அவனிடம் எப்போது விசாரணை நடத்துவது என்று பொலிஸார் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர். ஓரிரு நாட்களில் ராம்குமார் முழுமையாக குணம் அடைந்ததும் அவனை சென்னை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.

அதன் பிறகு இந்த கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.