புதிய ஆளுநருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார் ஜனாதிபதி!!

507

Aalunar

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திரஜித் குமாரசுவாமி இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதியினால் இவருக்கான நியமனக் கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், புதிய ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதியால் கடந்த 2ம் திகதி நியமிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இந்திரஜித் குமாரசுவாமி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரியுமாவார்.
இந்திரஜித் குமாரசுவாமி, சஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

1973ம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியில் இணைந்த குமாரசுவாமி, 1989ம் ஆண்டு வரை அங்கு பொருளியல் ஆய்வுப் பிரிவிலும், வங்கிகள் கண்காணிப்புப் பிரிவிலும் பணியாற்றினார்.

அதன் பின்னர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் சேவையாற்றிய கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, 1990ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை பொதுநலவாய நாடுகளின் செயலகத்தில் உயர்மட்ட பதவிகளை வகித்துள்ளார்.