மானாமதுரை அருகே 6ம் வகுப்பு மாணவியை பள்ளியில் இருந்து கடத்தி சென்ற வாலிபர், அவரது கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்தார். மாணவியை கொலை செய்த வாலிபரை, சென்னை பெண் சுவாதி கொலை சம்பவத்தில் நடந்தது போல, கழுத்தறுபட்ட நிலையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தலைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). டிரைவிங் தெரிந்த இவர் வேலையில்லாமல் இருந்துள்ளார். இவரது உறவினர் ஜெயா, அதே பகுதியில் வசித்து வருகிறார். ஜெயாவின் மகள் காளீஸ்வரி (11), மேலநெட்டூர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி முடிந்தும், காளீஸ்வரி வீட்டுக்கு வரவில்லை. அவரது தோழிகளிடம் ஜெயா விசாரித்தார். இதில் பள்ளி முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு, கார்த்திக் அவரை டூவீலரில் அழைத்து சென்றது தெரிந்தது. இதனையடுத்து கார்த்திக்கின் செல்போனில் ஜெயா தொடர்பு கொண்டார்.
போனில் பேசிய கார்த்திக், ‘காளீஸ்வரியை கொலை செய்து விட்டேன்’ என கூறி விட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார். மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட போது, போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் பேரில் டிஎஸ்பி புருேஷாத்தமன், இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொலிசார் கணபதியேந்தல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில், அரை மயக்க நிலையில் கார்த்திக் விழுந்து கிடந்தார். அவர் அருகிலேயே ஒரு பூச்சிமருந்து பாட்டிலும் கிடந்தது. போலீசாரை கண்டதும், உடனடியாக தன்னிடம் இருந்த கத்தியால், அவர் தனது கழுத்தை அறுத்து கொண்டார் என கூறப்படுகிறது.
கழுத்தில் வெட்டு காயங்களுடன் அவரை மீட்ட போலீசார், மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.சிறுமி காளீஸ்வரியை கொலை செய்து விட்டதாக அவர் போலீசாரிடமும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் காளீஸ்வரியின் சடலத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இன்று அதிகாலை 5 மணியளவில் அம்மனேந்தல் கண்மாய் பகுதியில் சீருடை அணிந்த நிலையில், கழுத்து கொடூரமாக அறுக்கப்பட்டு, காளீஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் கார்த்திக்குக்கு கழுத்தில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளன.
அவர் தொடர்ந்து மயக்க நிலையில் உள்ளதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த போலீசார் கூறுகையில், ”மாணவியை கடத்தி கொலை செய்ததாக கார்த்திக் கூறினார். கொலைக்கான காரணம் குறித்து, அவர் இதுவரை ஏதும் கூறவில்லை. அவரது கழுத்தில் 3 ஆழமான வெட்டுக்காயங்கள் உள்ளன. அவரே வெட்டி கொண்டாரா அல்லது வேறு யாராவது வெட்டினார்களா என விசாரித்து வருகிறோம்” என்றனர்.
சமீபத்தில் சென்னையில் பெண் பொறியியலாளர் சுவாதி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், வாலிபர் ராம்குமாரை, நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கழுத்தில் அறுபட்ட நிலையில் போலீசார் கைது செய்தனர். அதே போன்று பள்ளி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதும், கொலை செய்த வாலிபர் கழுத்து அறுபட்ட நிலையில் கைதாகியுள்ளதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.






