நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள் : மறைந்து வருகின்றதா மனிதநேயம்?

686

Torcher

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அரசியல் களத்தில் இது என்ன வித்தியாசமான கட்டுரை என்று நிச்சயம் இதற்கு காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக மிருகவதை அதிகரித்து விட்டது. இதனை அரசியலாக பார்க்காமல் தீர்வு ஒன்று நிச்சயம் கிடைக்கபெற வேண்டும். இனி விலங்குகளை வதைப்பதை பற்றி நினைத்தால் அரசியலால் கொண்டு வரப்படும் சட்டத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் ஓர் அச்சம் நிச்சயம் எழ வேண்டும்.

மிருகங்களை கொடூரமான முறையில் வேட்டையாடுவது தொடர்பான சம்பவங்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னால், ஈவிரக்கமில்லா முறையில் ஒரு கழுகின் தோலை உரித்து அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

எதற்காக இந்த போலி விளம்பரம் ஓர் உயிரைத் தண்டித்து, அழித்து வாழ்வது தான் மனித தத்துவமா?

இந்த குற்றங்களை செய்தவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது, தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இரக்கமில்லாத விலங்குக் கொலைக் குற்றஞ்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்களேயான நிலையில், மீண்டும் ஒரு கொடூர கொலை பதிவாகி விட்டது.

வன விலங்குகளை வேட்டையாடி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் இடம்பெற்றது.

இந்த புகைப்படங்களில் மான், காட்டுப்பூனை, வெளவால், முயல், மரை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, காட்டுக்கோழி மற்றும் மர அணில் போன்றவற்றை வேட்டையாடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது.

இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை குற்றவாளிகளுக்கு ஆர்வத்தை துண்டுவதாகதான் இருந்தன. கொலையாளிகள் அவற்றை தொங்கவிட்டு, தோலுறித்தது மாத்திரமன்றி, நெருப்பில் சுட்டு சாப்பிடுவதற்கு தயார் செய்யும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இவை அனைத்தும், அரசு தவறு செய்தால் மன்னிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் 20, 22, 28, 30, 33 மற்றும் 42 வயதுடையவர்கள் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சாஜித் மொஹமட் சரான், நலிந்த வீரதுங்க, ரவீந்திர வீரதுங்க, ருவன் சஞ்ஜீவ, மருதன் நந்தகுமார் மற்றும் சந்திரசேகரன் விஜயகாந்த் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டது.

இது தண்டனை அல்ல. கொடுக்கப்படும் தண்டனைகள் மக்கள் மத்தியில் மிருகவதை பற்றிய எண்ணங்கள் கூட எழாத வண்ணமாக அமைய வேண்டும் அளவு இருக்க வேண்டும். மனிதனைத் கொன்றால் மட்டும் தான் தண்டனைகளும் தீர்ப்புகளும் பயங்கரமாக வேண்டுமா? காரணம் புரியவில்லை அனைத்தும் உயிர் தானே எனும் எண்ணம் மனித மனத்தில் விதைக்கப்பட வேண்டும்.

இதேவேளை, காட்டு விலங்குகளை வேட்டையாடுவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காலம் கனிந்துள்ளது.

30 வருடங்கள் பழமையான வனஜீவராசிகள் சட்டத்தை, முழுமையாக திருத்த வேண்டும்.மனிதர்களைப் போன்று, மிருகங்கள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கும் வாழும் உரிமை உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அப்படி மாற்றங்கள் உருவாக்கப்படும் எனின் வெறுமனே வாழ்ந்தோம் இறந்தோம் என வாழும் மனிதம் எதிர்காலத்திற்காக எதையாவது விட்டு செல்லும் அது நாளைய பசுமையாக அமையப் பெறும் என்பதில் மட்டும் எவ்வித ஐயமுமில்லை.